பெங்களூரு: ரஞ்சி கோப்பை காலிறுதியில் ஜார்க்கண்ட் அணியுடன் டிரா செய்த பெங்கால் அணி, முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் ஆலூரில் ஜூன் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பெங்கால் – ஜார்கண்ட் இடையிலான காலிறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்தது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் பந்துவீச, பெங்கால் 7 விக்கெட் இழப்புக்கு 773 ரன் குவித்து (218.4 ஓவர்) முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அந்த அணியின் 9 வீரர்கள் 53 முதல் 186 ரன் வரை என எல்லோரும் அரை சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய ஜார்க்கண்ட் 298 ரன் சேர்த்து ஆட்டமிழந்தது (96 ஒவர்). 475 ரன் முன்னிலையுடன் பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை விளையாடிய பெங்கால், 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்னுடன் என்ற ஸ்கோருடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது. மனோஜ் திவாரி சதம் விளாசினார். உணவு இடைவேளைக்கு பிறகு பெங்கால் 85.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன் என்ற ஸ்கோருடன் பெங்கால் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. திவாரி 136, ஷாபாஸ் அகமது 46 ரன் எடுத்தனர். ஜார்க்கண்ட் தரப்பில் ஷாபாஸ் நதீம் 5 விக்கெட் அள்ளினார் (24-4-59-5).ஜார்க்கண்ட் 2வது இன்னிங்சை தொடங்க நேரமில்லாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற பெங்கால், 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.ஏற்கனவே உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மும்பை அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. பரபரப்பான அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 14ம் தேதி தொடங்குகின்றன. பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் – மத்தியபிரதேசம் அணிகளும், ஆலூரில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை – உத்தர பிரதேசம் அணிகளும் மோத உள்ளன.சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜூன் 22ம் தேதி பெங்களூருவில் தொடங்க உள்ளது….