உடன்குடி : மெஞ்ஞானபுரம் அருகே ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிய காதலனை சேர்த்துவைக்கக்கோரி அவரது வீட்டுமுன்பாக பட்டதாரி இளம்பெண், கொட்டும் மழையிலும் தர்ணாவில் ஈடுபட்டார். தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே நயினார்பத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் விஜயா (26). பட்டதாரியான இவர் கல்லூரிக்குச் சென்றபோது மெஞ்ஞானபுரம் மருதூர்கரையைச் சேர்ந்த ஆத்திபாண்டியனின் மகன் திருமணிகுட்டி என்பவர் விஜயாவை தொடர்ந்து பின்சென்று ஒருதலை பட்சமாக காதலித்தார். பின்னர் இந்த காதலை விஜயா ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஜயாவுக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட திருமணிகுட்டி இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சத்தியம் வாங்கினாராம். அதன்படி விஜயாவும் யாரிடமும் இதை கூறவில்லை. அத்துடன் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் கணவன், மனைவியாக வாழ்ந்ததுடன் செல்போனிலும் பேசி வந்தனர். இதனிடையே விஜயாவுக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்த நிலையில் நடந்த சம்பவங்களை விஜயா கூறினார். இதனால் கோபமடைந்த திருமணிகுட்டி விஜயாவை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதே வேளையில் விஜயா குடும்பத்தினரும் விஜயாவை வீட்டைவிட்டு வெளியேற்றினர். இதையடுத்து திருமணி குட்டியிடம் சென்றபோது அவர் ஏற்கவில்லை. அத்துடன் திருமணிகுட்டி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விஜயா முறையிட்டும் பலனில்லை. பின்னர் விஜயா அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் சமரசப்படுத்தியும் விஜயாவை ஏற்க மறுத்தனர். ஆனால், அப்போதும் திருமணிகுட்டி மறுத்ததால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில் திருமணிகுட்டிக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்க்கத் துவங்கினர். இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த விஜயா, நேற்று காலை காதலன் திருமணிகுட்டி வீட்டுக்கு சென்று கொட்டும் மழையில் தரையில் அமர்ந்த படி தன்னை சேர்த்து வைக்கும் படி தர்ணாவில் ஈடுபட்டார். விரைந்து வந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சமரசப்படுத்த முயன்றபோதும் அதை ஏற்க மறுத்த விஜயா, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….