போபால்: ‘தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் மருத்துவம், தொழில்நுட்ப கல்வி படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்,’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்தியாவில் மருத்துவக் கல்வி ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என ஒன்றிய அரசு திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், இந்தியில் எம்பிபிஎஸ் படிக்கும் திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய பிரதேசத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக, இந்தியில் இடம் பெற்ற எம்பிபிஎஸ் முதலாண்டுக்கான உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் பாடபுத்தகங்களை அவர் வெளியிட்டார். இதில் அமித்ஷா பேசுகையில், ‘‘இது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 8 மொழிகளில் தொழில்நுட்பம், மருத்துவம் படிப்பதற்கான நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய கல்வி கொள்கை சட்டத்தின்கீழ் இந்தியில் மருத்துவ கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை மாணவர்களிடம் இனி இருக்காது. தாய்மொழியிலேயே மருத்துவம் பயில்கிறோம் என்று மாணவர்கள் பெருமையாக சொல்ல முடியும். வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் போது பிரதமர் மோடி இந்தியில்தான் பேசுகிறார்’’ என்றார். …