டெல்லி: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்பட மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு நாள்தோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் 15 முதல் 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்து வருகிறது. விலை உயர்வை சமாளிக்க சில்லறை விலையில் டீசல் வாங்க எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அரசுப் போக்குவரத்து கலக்கம் மட்டுமின்றி தொழிற்சாலைகள் மற்றும் பெரு நிறுவனங்களும் மொத்தமாக டீசல் வாங்குகின்றன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சில்லறை விற்பனை விலையை விட லிட்டருக்கு 64 காசு குறைவாக டீசல் வழங்க எண்ணெய் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் நாள்தோறும் ரூ.3.5 கோடி இழப்பு தவிர்க்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். …