திருவள்ளூர்: மொண்ணவேடு ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம், மொண்ணவேடு ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான சாண்டில்யன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: குழந்தை திருமணம் குறித்தும், குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான அரசாங்க சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது பெண்களுக்கான உதவி எண் 181 மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 என்பது குறித்து பேசினார். மேலும், 14 வயது உள்ள குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது.
அவ்வாறு சுற்றியுள்ள செங்கல் சேம்பர்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தால் தகவல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த முகாமில், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் பிரியங்கா, நசீர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உளவியல் ஆலோசகர் ஜான்சிராணி, சமூக நலத்துறை ஆலோசகர் சரண்யா, பிருந்தாவனம் கூட்டமைப்பின் தலைவர் உமாராணி மற்றும் ஐஆர்சிடிஎஸ் பணியாளர்கள் கவிதா, பழனி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை திருமணம் குறித்தும், குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான அரசாங்க சலுகைகள் குறித்தும் விளக்கி பேசினர்.