திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ரயில்களில் வரும் பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நேற்று இரவு 7.40 மணி அளவில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் முதல் நடைபாதையில் வந்து நின்றது. இந்த ரயிலில் பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2 பேர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அருணன் ஆகியோர் வளையல், நெக்லஸ், ஆரம், உள்ளிட்ட 6 கிலோ எடை கொண்டு தங்க நகைகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் கூறுகையில், திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடி என்பது தெரியவந்துள்ளது. நகையை கொண்டு வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்று தெரிவித்தார். …