மேலூர், ஜூன் 12: மேலூரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தகவல் தரலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலூர் மது விலக்கு அமல் பிரிவு சார்பாக, மேலூர், ஊமச்சிக்குளம் உட்கோட்டங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்வது, எரிசாராயம் கடத்துதல், கஞ்சா பயிரிடுதல், விற்பனை செய்தல், வைத்திருத்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவலை மேலூர் மது விலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்போன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் அறிவித்துள்ளார்.
தகவல் தெரிவிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்என்பதுடன் அவர்களுக்கு தகுந்த சன்மானமும் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்படி கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா இல்லாத மதுரை மாவட்டத்தை, அனைவரும் சேர்ந்து உருவாக்க சபதம் ஏற்போம் என விழிப்புணர்வு ஏறுபடுத்தப்பட்டது. மேலூர் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் 73050 26278, மேலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் 83000 43299, மது விலக்கு எஸ்,ஐ 98941 82847 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மேலூர் பஸ் ஸ்டாண்ட், அரசு கல்லூரி அருகில் மது விலக்கு போலீசாரால் வழங்கப்பட்டது.