பெரம்பூர்: ஊரே வெள்ளத்தில் புரண்டாலும் சிலர் தாங்கள் செய்யும் காரியங்களை செவ்வனே இடைவிடாது செய்து வருவார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் மது பிரியர்கள். கடந்த 2 நாட்களாக சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மது பிரியர்கள் வழக்கம்போல தங்களது பணியினை செவ்வனே சிறப்பாக செய்தனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் தண்ணீர் தேங்கி நின்றாலும் தங்களின் தாகம் தீர்க்க தண்ணீரில் நடந்து சென்று மது வகைகளை வாங்கி தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டனர். சிலர் தண்ணீரில் தள்ளாடியபடி சென்றதும் கண்கூடாக காண முடிந்தது.அதில் ஒரு ஆசாமி ஒருபடி மேலே சென்று புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெரு பகுதியில் முழு மதுபோதையில் முழங்கால் அளவு தண்ணீரில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று ‘மேகம் கருக்குது… மின்னல் சிரிக்குது…’ என்ற பாட்டிற்கு பாடல் பாடி பொதுமக்கள் பார்க்கும்படி குளித்துக் கொண்டிருந்தார். அவர் முழு மதுபோதையில் இருப்பதை அறிந்த பொதுமக்கள் எந்தவித செய்கையும் காட்டாமல் சென்று கொண்டிருந்தனர். இருந்தபோதும் தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் சைகை காட்டி அத்துமீறவே அப்பகுதி மக்கள் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுபோதையில் இருந்த நபரை அழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்….