உடன்குடி, ஜூன் 2: மெஞ்ஞானபுரம் அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக பிஎஸ்சி பட்டதாரி உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இருதரப்பினர் புகாரின் பேரில் 11பேர் மீது வழக்கு பதிவு செய்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழியை சேர்ந்த ஜோதிமணி, சந்திரா ஆகிய இருவரும் அக்கா தங்கைகள். இரு குடும்பத்தினரிடையே சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் மீண்டும் சொத்து பிரிப்பது சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட மோதலில் பிஎஸ்சி பட்டதாரியான ஆர்த்திக் ராஜா, டேனியல் பரத் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாராஜா, ஜெயசீலி, சந்திரா, டேனியல், ஆர்த்திக்ராஜா, ஷாம், ஜோதிமணி, சரோஜா, தாமஸ்மனோஜ், ஜெபஸ்டா, ஷீபா உள்ளிட்ட 11பேர் மீது மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.