சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 13 காங்கிரஸ் வேட்பாளர்களும் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். இதுபோல, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சியில் வென்ற வேட்பாளர்களுடன் மு.கஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் கூறினர். நேற்று மாலை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். …