முன்விரோத தகராறில் வாலிபரை கட்டையால் தாக்கிய 4 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி கென்னடி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (19). இவர், கடந்த வாரம் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சத்தியமூர்த்தி நகர் 20வது பிளாக் பகுதிக்கு சென்றிருந்தார். நண்பருடன் சேர்ந்து வீதியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியபோது, அங்கு போதையில் இருந்த விக்னேஷ் என்பவருடன் சிவக்குமாருக்கு தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து விக்னேஷ், சிவக்குமார் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 20வது பிளாக் பகுதியில் சிவக்குமார் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிவக்குமாரை கட்டையால் தாக்கினர். இதில் சிவக்குமாருக்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அப்துல் கலாம் (20), அலி (21), விக்னேஷ் (21), சபியுல்லா (20) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை