முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிய இளைஞருக்கு வலை

 

விருத்தாசலம், ஜூன் 3: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்னத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராமு(45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சந்துரு(20) என்பவருக்கும் நிலப் பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ராமு சாப்பிட சென்று விட்டு திரும்ப ஓட்டலில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சந்துரு, ராமுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராமுவின் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளார். இதில் ராமுவின் கைவிரல்கள் துண்டாகியுள்ளது. தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சந்துருவை தேடி வருகின்றனர். மேலும் இதே பிரச்னையின் காரணமாக ராமுவை கடந்த மூன்று மாதத்திற்கு முன் சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியுள்ளனர். அப்போது ராமு மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இருவரையும் மங்கலம்பேட்டை போலீசார் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்னை எழுந்து கத்தி வெட்டில் முடிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்