ஈரோடு,செப்.27: முன்னாள் படைவீரர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்”என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும்,இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும்,3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும் ராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424 – 2263227 மற்றும் exwelerd@tn.gov.in < mailto:exwelerd@tn.gov.in > என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.