தஞ்சாவூர், ஜூன் 27: தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் நடத்தப்படும் முதுகலைப் பட்டப் படிப்பிற்கான 2024-2025ஆம் கல்வியாண்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்மொழிக்கென்று உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பல்துறைச் சார்ந்த சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு கல்வி பயிற்றுவிப்பதால் மாணவர்களின் எதிர்காலம் மேம்படுகிறது. எனவே, இந்த அரியவாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமென்று மாண்பமை துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் அறிவுறுத்தினார். பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு பறந்துபட்ட பல்கலைக்கழகமாகத் திகழ்வதால் மாணவர்கள் தங்களுடைய கல்வியை நன்முறையில் பயில்வதற்கு இது சிறந்த களமாக அமையும் என்றார்.
கலைப்புல முதன்மையரும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் இலக்கியத்துறை பேராசிரியருமான முனைவர் பெ.இளையாப்பிள்ளை, முதற்கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இன்னும் மாணவர்களின் சேர்க்கைக்கான 2 கலந்தாய்வுக்கூட்டங்கள் நடைபெறும் என்றார். நிறைவாக இலக்கியத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.தனலெட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்வில் மொழிப்புல முதன்மையர் முனைவர் ச.கவிதா, நாட்டுப்புறவியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சீ.இளையராஜா, மொழியியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ம.இரமேஷ்குமார், சேர்க்கைப்பிரிவு கண்காணிப்பாளர் திருமதி தே.ரேவதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் கலந்துகொண்டனர்.