கரூர், செப். 27: கரூர் மாநகராட்சியில் அமராவதி மற்றும் காவேரி நீர் ஆதாரங்களைக் கொண்டு பொதுமக்களுக்கு எவ்வாறு சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் கவிதா கணேசன் தலைமை வகித்தார். துணை மேயர் தாரணி சரவணன், பொறியாளர் மோகன், துணைப் பொறியாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் கவிதா கணேசன் தெரிவித்ததாவது: நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். மேலும் சில வார்டு பகுதிகளில் அதிக தண்ணீர் விடுவதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக அதிகமான நீர் வீணாகிறது. எனவே தண்ணீர் வினியோகம் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும் என்றார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சாலை ரமேஷ், மாநகராட்சி உறுப்பினர் தியாகராஜன், உதவி பொறியாளர் மஞ்சுநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.