பாப்பாக்குடி: நெல்லை மாவட்டம் முக்கூடலில் கடையம் – நெல்லை சாலையில் மத்திய அரசின் பீடித்தொழிலாளர் நல மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனை 8 ஏக்கரில் 15000 சதுர அடியில் மிக பிரமாண்டமான கட்டிட அமைப்புடன் அமைந்துள்ளது. தற்போது கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மத்திய அரசுக்கு சொந்தமான இந்த மருத்துவமனையை கொரோனா கேர் சென்டராக அதாவது கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற நெல்லை கலெக்டர் விஷ்ணு தொழிலாளர் துறைக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து பீடி தொழிலாளர் மருத்துவமனையில் உள்ள 90 அறைகளில் சுமார் 70 அறைகள் பயன்படுத்தபட உள்ளது. மேலும் சுமார் 150 படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவமனை வாசலில் ‘விதிமுறைகளை மதிப்போம்: விரைவில் வீடு திரும்புவோம்’ என்று முக்கூடல் பேரூராட்சி நிர்வாகம் பிரமாண்டமான வாசகமும் இடம்பெற்றுள்ளது. அதேபோல் கொரோனா விதிமுறைகள் குறித்த வாசகங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. இன்னும் ஒரிரு நாளில் இங்கு கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதற்காக பணிகளை முக்கூடல் பேரூராட்சியினர், முக்கூடல் சுகாதாரத்துறையினர் மற்றும் தேட்டக்கலைத்துறையினர் இணைந்து இரவு பகலாக செயல்படுத்தி வருகின்றனர். மத்திய தொழிலாளர் நலத்துறை போதிய நிதி வழங்காமல் தொய்வடைந்த நிலையில் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனையில் கொரோனா மையமாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்….