நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மேலும் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். மற்ற 8 பேர் கேரளாவில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. காவல்துறை சார்பாக சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். தனிப்படை போலீசார் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் மேலும் கால அவகாசம் தேவை என்றும் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபாவிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நிபந்தனை ஜாமினில் உதகையில் தங்கியுள்ள வாளையாறு மனோஜ், தனது நிபந்தனை ஜாமினில் தளர்வுகள் அளிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நிபந்தனைகளை தளர்த்தக்கூடாது என்று வாதிடப்பட்டது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வாளையாறு மனோஜ் தளர்வு கோரிய மனு மீது இன்று மாலை தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்தார். …