அண்ணாநகர்: முகப்பேர் ரவுண்டு பில்டிங் பகுதியில், இரவு நேரத்தில் வீடுகள் முன் நிறுத்தப்படும் பைக்குகள் அடிக்கடி திருட்டுபோவதாக ஜெ.ஜெ.நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவரின் பைக் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்பேரில், ஜே.ஜே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 3 பேர், பைக்கை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. அதில் உள்ள உருவங்களை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், முகப்பேர் இளங்கோ நகரில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார். மற்ற 2 பேர் தப்பினர். பிடிபட்ட நபர், பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த பிரபல பைக் திருடன் முத்துக்குமார் (25) என்பதும், இவர் மீது கொரட்டூர், ஜெ.ஜெ நகர் மற்றும் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தப்பியோடிய அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்….