சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில், பண்டிகை காலம் என்றால், தங்கத்தின் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இதனிடையே ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. முன்னதாக சவரன் 40 ஆயிரத்தை எட்டி இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது. தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை அதிரடி சரிவை கண்ட நிலையில் இன்று மீண்டும் உயர்வை கண்டிருக்கிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து, ரூ.38,512க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.4,814க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 80 காசு உயர்ந்து ரூ.72.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் அதிரடியாக ரூ.352 குறைந்து ரூ.38,296க்கு விற்பனையானது நினைவுகூரத்தக்கது. …