திருப்பூர், அக். 10: மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி அனைத்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர். தொழில் நிறுவனங்களில் மின்சார நிலைக்கட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு, சூரிய ஒளி சக்தி மின் உற்பத்திக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை தொழில்துறையினரை பாதித்து வருகிறது.
மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூரில் அனைத்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், திருப்பூரில் அனைத்து நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி நேற்று போராட்டம் நடந்தது. இதில், 36 அமைப்பினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதன்பின், தொழில் அமைப்பினர் கருப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களான கோபி, முத்துரத்தினம், ஸ்ரீகாந்த் மற்றும் தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.