தர்மபுரி, மே 21: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மனைவி சுந்தரி (51). இவர் நாகமலை காவிரி கரையோரத்தில், தற்காலிக குடில் அமைத்து மீன் பிடித்து வந்தார். சுந்தரி நேற்று மாலை, தான் பிடித்த மீன்களை அதே பகுதியில் கருவாடாக்க வெயிலில் காய வைத்தார். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் காய வைத்த கருவாடுகளை அவர் எடுத்துக்கொண்டிருந்தார். திடீரென மின்னல் தாக்கியதில், சுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில், ஏரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.