மின்கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவெடுக்கக்கூடாது: ஒழுங்கு முறை ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மின்கட்டண உயர்வு தொடர்பாக இறுதி முடிவெடுக்கக் கூடாது என மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் (தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்) இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை. இந்த நிலையில் ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதாரர்கள் தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம். சட்டத்துறை உறுப்பினர் நியமித்ததும் முடிவு எடுக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு