பூந்தமல்லி: தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, திருவேற்காடு நகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்கள், பேருந்துகள், வேன்களில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள், நகராட்சி சுகாதாரப் பிரிவை தொடர்பு கொள்ளலாம் என்று நகராட்சி ஆணையர் இரமேஷ் தெரிவித்திருந்தார்.அதன் தொடர்ச்சியாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பேருந்து நிலையம், சன்னதி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாஸ்க் அணியாதவர்களை நிறுத்தி மாஸ்க் அணிய வைத்ததுடன் அவர்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் ₹10 ஆயிரம் வரை அபராத தொகை மாஸ்க் அணியாமல் வந்தவர்களிடம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது….