திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நேற்று தொடங்கியது.திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் முதல் நாளில் பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 11 கிராமங்களுக்கும், திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிக்கான நகராட்சியைச் சேர்ந்த 27 வார்டுகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.தமிழக அரசால் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் நோக்கத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் தீர்க்கப்படாத நீண்டகால பிரச்னைகளுக்கு மனு அளித்தால் தீர்வு காணமுடியும்.அதன் அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவி தொகை, பட்டா மாற்றம் (முழுபுலம் உட்பிரிவு), குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம், சாதி சான்றிதழ், இதர மனுக்கள் என மொத்தம் 229 மனுக்கள் வரையில் பெறப்பட்டது. இதில் 27 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் மீதமுள்ள 202 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிகழ்வில், நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், தனி வட்டாட்சியர்கள் பாண்டியராஜன், செல்வம், துணை வட்டாட்சியர்கள் ஜெயஸ்ரீ, சுந்தர், அருணா, சரஸ்வதி, சுகண்யா, வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் எல்.கிருஷ்ணன், நிர்வாகிகள் டி.விஸ்வநாத், குமரன், பரணிதரன், குமரேசன், த.சுகுமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், வட்ட நிர்வாகிகள் சசிகுமார், சீனிவாசன், சுப்பிரமணி உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். இதனைத்தொடர்ந்து ஜி.சி.எஸ்.கண்டிகை, வங்கனுர், எஸ்.வி.ஜி.புரம், அம்மனேரி, வெள்ளாத்தூர் மற்றும் சுற்றுவட்டார வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, மட்டா மாற்றம், மின்னணு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை உள்பட பல்வேறு உதவிகள் கேட்டு 197 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் துறை சார்ந்த அலுவலருக்கு அனுப்பிவைக்கப்பட்டு உடனடியாக 5 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு பட்டா, முதியோர் உதவித் தொகை, ஆகிய சான்றிதகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.பொதுமக்கள் மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஜமாபந்தி நடைபெற உள்ள 5 நாட்களில் தீர்வுகாணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், தாசில்தார் தமயந்தி, உதவி இயக்குனர் (சர்வே) குமரவேலு, தனி வட்டாட்சியர் மலர்விழி, ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் தேவி, மண்டல துணை வட்டாட்சியர்கள் ஆறுமுகம், லோகன், வட்ட வழங்கல் அலுவலர் திருவேங்கடம், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசுலு உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இதேபோல், பள்ளிப்பட்டு வட்டத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்று 54 மனுக்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணன் மற்றும் அலுவலர்கள் மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு உடனடியாக 6 பட்டா பெயர் திருத்தம், குடும்ப அட்டையில் முகவரி திருத்தம் செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் தனி வட்டாட்சியர் சண்முகவேலு, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சேகர், வருவாய் ஆய்வாளர்கள் அபிராமி, வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.ஆவடி: ஆவடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள் பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா மற்றும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை நேரில் அளித்தனர். முதல் நாளான நேற்று பருத்திப்பட்டு, பாலேரிப்பட்டு, விளிஞ்சியம்பாக்கம், சோரஞ்சேரி-பி, தண்டுரை பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. அப்போது, 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் விலிஞ்சியம்பக்கம் பகுதியை சேர்ந்த 27 பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தார். மேலும், இன்று (8ம் தேதி) திருநின்றவூர், நடுகுத்தகை, அக்ரஹாரம்மேல், நெமிலிச்சேரி, கருணாகரச்சோரி பகுதிகளிலும், 9ம் தேதி கோவில்பதாகை, திருமுல்லைவாயல், அயப்பாக்கம் பகுதிகளிலும், 10ம் தேதி பாலவேடு, முத்தாப்புதுபேட்டை, மிட்டனமல்லி, மோரை, மேல்பாக்கம், கடவூர், வெள்ளச்சேரி, கீழ்க்கொண்டையார் பகுதிகளிலும், 14ம் தேதி ஆலத்தூர், பாண்டேஸ்வரம், ஆரம்பாக்கம், வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம் ஆகிய பகுதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி தலைமை தாங்கினார். தாசில்தார் ரமேஷ், தனி தாசில்தார் லதா, மண்டல துணை தாசில்தார் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜமாபந்தியின் முதல் நாளான நேற்று ஊத்துக்கோட்டை, தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சியகரம், பேரண்டூர், பனப்பாக்கம், சென்னங்காரணை, தொளவேடு, தண்டலம், பருத்திமேனி, தும்பாக்கம், காக்கவாக்கம் ஆகிய 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டா மாற்றம் 31 பேர், முதியோர் உதவித்தொகை 2 பேர், இதர மனுக்கள் 38 பேர் என 71 மனுக்களை வழங்கினர்.மேலும் மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நஞ்சை நில விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் மாவட்ட விவசாய சங்க தலைவர் சம்பத், நஞ்சை நில விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் குணசேகரன், சசிகுமார் ஆகியோர் 6 வழிச்சாலைக்காக எடுக்கப்பட்ட நிலம் முப்போகம் விளையக்கூடிய நிலம் என்பதற்கான ஆதாரத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், வட்ட வழங்கல் அலுவலர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.பொன்னேரி: பொன்னேரி வட்டத்தில் 1431ம் வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் மூலம் நடத்தப்பட்டது. வருவாய் தீர்வாயமானது நேற்று காலை 9 மணிக்கு துவங்கி அறிவிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பட்டா பெற்றுக்கொண்டனர். பொதுமக்களின் இதர குறைகள் சம்பந்தப்பட்ட மனுக்களும் இதில் பெறப்பட்டது. சோழவரம் உள்வட்டத்தில் அடங்கிய நல்லூர், ஜெகநாதபுரம், ஆத்தூர் புது எருமைவெட்டிபாளையம், பழையபாளையம், காரனோடை, சோத்துப்பெரும்பேடு, விஜயநல்லூர் உள்ளிட்ட குறுவட்டத்தில் அடங்கிய பொதுமக்கள் மனுக்களை பொன்னேரி கோட்டாட்சியர் கே.காயத்ரி சுப்பிரமணியனிடம் வழங்கினர். தொடர்ந்து, கோட்டாட்சியர் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டிய மனுக்களுக்கு உடனடியாகவும் விசாரணைக்கு பின் தீர்வு காணக்கூடிய மனுக்களை அதிக அளவில் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யும் நடவடிக்கை மேற்கொண்டார்.அப்போது பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், சுமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்….
மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி தொடக்கம்: ஏராளமான மனுக்கள் குவிந்தன
previous post