திருப்பரங்குன்றம்: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்டிஓவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், திருப்பரங்குன்றம் அருகில் உள்ள வேடர்புளியங்குளம் கிராமத்தில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 53 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட இடம் மிகவும் பள்ளமாக உள்ளது. அங்கு வீடு கட்டி குடியிருக்க முடியாத நிலை உள்ளது. மேலும் தென்பழஞ்சி திருப்பரங்குன்றம் முக்கிய சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளே செல்ல வேண்டியுள்ளது. எனவே மாற்று இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கோரிக்கை மனுவை பெற்று கொண்ட ஆர்டிஒ மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.