சென்னை: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்து, அவற்றை படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நின்று, இன்றைக்கு நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இங்கே அதிமுகவை சார்ந்த உறுப்பினர் அருண்குமார், திமுக உறுப்பினர் உதயநிதி ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி, அதையொட்டி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கைகள் அனைத்தையும் நான் நிச்சயமாக, உறுதியாக படிப்படியாக நிறைவேற்றுவேன். மாற்றுத்திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆணையரகத்திற்கு நானே நேரடியாக சென்று, சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அமைப்புகளுடைய நிர்வாகிகளை அழைத்து, இதில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, என்னென்ன பிரச்னைகளையெல்லாம் நாங்கள் தீர்த்து வைத்திருக்கின்றோம், அதனால் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் என்ன, இன்னும் மீண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆலோசிப்பதற்காக மிக விரைவில் ஒரு பெரிய ஆய்வு கூட்டத்தை நடத்தி, நிச்சயமாக அதற்குரிய பரிகாரத்தை இந்த அரசு காணும். படிப்படியாக அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதை இங்கு பேசிய உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இதை ஓர் அறிவிப்பாகவே அறிவிக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்….