புதுடெல்லி: பேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வெளியிடப்பட்ட 3.15 கோடி பதிவுகள், கடந்த ஜூன் வரையிலான 2வது காலாண்டில் நீக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை மக்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகமாகி இருக்கிறது. போலி செய்திகள், ஜாதி, மதம், சமூக ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக சமூக வலைதள நிர்வாகங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த ஜூன் வரையிலான 2வது காலாண்டில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட 3 கோடியே 15 லட்சம் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை உலகளவில் நீக்கி இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு துணைத் தலைவர் காய் ரோசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தாண்டு மார்ச் வரையிலான காலாண்டில் உலகம் முழுவதும் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட 2 கோடியே 42 லட்சம் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் நீக்கப்பட்டன. இதில், 63 லட்சம் பதிவுகள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டவை. கடந்த ஜூன் வரையிலான அடுத்த காலாண்டில் 3 கோடியே 15 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன ,’ என கூறியுள்ளார். …