சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, பீன்ஸ், தக்காளி முதலான காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதனால், அவற்றின் விலை வழக்கத்தைவிட, குறைந்த பட்சம் 2 முதல் 10 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 550 வாகனங்களில், சுமார் 5,000 டன் காய்கறிகள் வருகின்றன. நேற்று காலை 480 வாகனங்களில் 4,500 டன் காய்கறிகள் வந்தன. இதன் காரணமாக, பீன்ஸ், தக்காளி, கேரட், கத்திரி, கோஸ் ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் ஒரு கிலோ பெங்களூர் தக்காளி ₹60க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை ₹70க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிலோ நாட்டு தக்காளி ₹50ல் இருந்து ₹60க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ கேரட் ₹25ல் இருந்து ₹35க்கும், பீன்ஸ் ₹80ல் இருந்து ₹90க்கும், கத்திரிக்காய் ₹25ல் இருந்து ₹35க்கும், குடை மிளகாய் ₹30ல் இருந்து ₹40க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், ‘‘தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது. இதனால் கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி, கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், குடைமிளகாய் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. தற்போது, 480 வாகனங்களில் 4,500 டன் காய்கறிகள் மட்டுமே வருகிறது. வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென மீண்டும் உயர்ந்துள்ளது.இந்த விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.’’ என்றார்….