உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மானாவாரியாக உளுந்து பயிரிட்டு இருந்தனர். தற்போது செடியில் பூ வைத்து காய் வைக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பூச்சிகள் தாக்குதல்கள் அதிகளவில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயி பழனி என்பவர் கூறிய போது, உளுந்து பயிரில் தாக்கி வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.1,200 வரையில் செலவாகி வருகிறது. இதுபோல் 2 முறை அடித்தால் கூட கிடைக்கும் மகசூலை விட செலவு அதிகமாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். வேளாண்மை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மானாவாரி உளுந்து பயிரில் தாக்கி வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த மானிய விலையில் மருந்துகள் வழங்கிட வேண்டும் என கூறினார். …