சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில் முகாமிட்டன. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானைகளை கண்டு அச்சமடைந்தனர். சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் காட்டு யானைகள் அருகே வாகனங்களை நிறுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது என அறிவுறுத்தினர். சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன….