தண்டையார்பேட்டை: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்படும் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவை வாடகை கட்டாமலும் உரிமத்தை புதுப்பிக்காமலும் காலம் கடத்தி வருகிறார்கள் என்றும் அவ்வாறு செய்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு 49 முதல் 63 வரை உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் ஆகிவற்றில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் ஒரு கோடியே 50 லட்சத்துக்கு மேல் வாடகை பாக்கி நிலுவையில் வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வாடகை பாக்கி செலுத்த முன்வரவில்லை. இந்த நிலையில், இன்று காலை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள் நிதிபதி ரங்கராஜன், முருகேசன், வரி மதிப்பீட்டாளர் ரஹமத்துல்லா, உரிமம் ஆய்வாளர்கள் மணிகண்டன், செரீப், பத்மநாபன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாரிமுனை, எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தியேட்டர் ஆகியவைகளுக்கு சீல்வைத்தனர். அத்துடன் வரிபாக்கியை கட்டச்சொல்லி கடை, வணிக வளாகம் மீது நோட்டீஸ் ஒட்டினர். பிரச்ைன தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ‘’சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள், வாடகை பாக்கி பணத்தை உடனடியாக டிடியாக எடுத்து மாநகராட்சி வருவாய் துறைக்கு செலுத்தினால் மேல் அதிகாரிகளிடம் பேசி உடனடியாக கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அதிகாரிகள் தெரிவித்தனர்….