திண்டுக்கல், ஜூலை 2: திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாறுவேட போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல் நிலை நூலகர் சக்திவேல் வரவேற்றார். வட்ட வாசகர் வட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கவேலு மாரிமுத்து, ஜெயசீலன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், எல்கேஜி முதல் 2ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான மாறுவேடம் போட்டி நடைபெற்றது. இதில் பாரதியார், ஜான்சி ராணி, நேரு, ஔவையார் போன்ற வேடங்களில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் வட்ட தலைவர் தியாகராஜன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், வாசகர் வட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் சுரதா,முருகேசன், பாலாஜி சுப்பிரமணி, ஜெயராமன், பழனிச்சாமி, சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.