மாஜி அமைச்சரும் அடிப்பொடிகளும் ரெய்டு பயத்தில் அரண்டு கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ரெய்டு பயத்துல மாஜியும் அவரோட அடிப்பொடிகளும் அரண்டு கிடக்கிறார்களாமே..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில்  கடந்த 10 ஆண்டு இலைக்கட்சி ஆட்சிக்காலத்தின் ஏராளமான துறைகளில் நிரம்பி  வழியும் முறைகேடு புகார்களால், முன்னாள் அமைச்சர்கள், அவரது உறவினர்கள்  வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிரடி சோதனைகளை வேகப்படுத்தி  வருகிறது. மெடல் மாவட்டத்தின் மில்க் துறை மாஜி அமைச்சரின் வீட்டில்  எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடக்கும் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில்  வெகு வேகமாகப் பரவி வருகிறது. இவரின் ஆதரவாளர்களும் தங்கள் பங்குக்கு  எண்ணிலடங்காத செல்வங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்களாம்.  8  ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரு நல்ல டூவீலர்  கூட வாங்கி ஓட்ட முடியாத  நிலையில் சாதாரணமானவர்களாக தத்தளித்து வந்தவர்கள், இன்றைக்கு அசாதாரண  உயரத்தைத் தொட்டு, பல லட்சம் மதிப்பு சொகுசு கார்களில் பவனி  வருகிறார்களாம். அந்தளவிற்கு கோடிக்கணக்கில் செல்வங்களை வாரி வைத்திருக்கிற  இலைக்கட்சியின் மில்க் துறை மாஜியின் விசுவாசிகளும் தங்களது வீடுகளில்  லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தலாம் என்ற  பீதியில் உள்ளனராம்…  பணம்,  பத்திரங்களை வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்தும் பக்.. பக்-கென  பயத்துடனேயே பொழுது கழிக்கிறார்களாம். மாஜியின் கூடவே இருந்து வசூல்  பார்த்த இவர்களால் பாதிக்கப்பட்ட இலைக்கட்சியினரில் சிலர், இந்த ரெய்டு  எப்போது நடக்குமென எதிர்பார்ப்பதுதான் பெரும் ஆச்சரியம்’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘குமரி மாவட்ட விவகாரம் என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் உள்ளது. ஆவணி மாதம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நாகராஜரை வழிபடுவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. கொரோனா காரணமாக 2வது ஆண்டாக இந்த முறையும் ஆவணி ஞாயிறு வழிபாட்டுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.  பாரம்பரியமாக நடந்து வரும் ஆவணி ஞாயிறு வழிபாட்டின்போது ஒவ்வொரு அரசு துறைகள் சார்பிலும் பூஜைக்கு தேவையான ெபாருட்கள் வழங்கப்படுவதுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். ஆவணி கடைசி ஞாயிறு அன்று பொதுப்பணித்துறை சார்பில் வெகு விமரிசையாக அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறும். ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக  நாளை ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, வழிபாட்டுக்கு பக்தர்கள் அனுமதி இல்லாவிட்டாலும் கூட 100 பேருக்கு லட்டு, 100 பேருக்கு அன்னதானம் என எளிய முறையில் கோயிலுக்கு வெளியே வைத்து பொதுமக்களுக்கு வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் இதை காரணம் காட்டி பொதுப்பணித்துறையில் உள்ள சிலர் காண்ட்ராக்டர்களிடம் ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்களாம். தாமரை பூ பறிப்பவர்கள், தாமரை இலை பறிப்பவர்கள், குளங்களில் மீன் பிடிப்பவர்கள் என பல தரப்பிலும் இருந்து பணம் குவிந்து வருகிறதாம். இவ்வாறு குவியும் பணத்தை அதிகாரிகள் அந்தஸ்தில் உள்ள சிலர் மட்டுமே தங்களுக்குள் பங்கிட்டு கொள்கிறார்களாம். பக்தர்களே வராத நிலையில், நாகராஜர் பெயரை கூறி வசூல் வேட்டை நடத்துவது, பொதுப்பணித்துறையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோலோச்சியவரை இப்போ யாருமே கண்டுக்கிறதில்லையாமே..’’ ‘‘சட்டப்பேரவை  தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இலை கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்ற  கனவில் நெற்களஞ்சிய மாவட்டத்தில் நாடு என்ற கடைசி பெயரான ெதாகுதியில் மாஜி  அமைச்சரான வைத்தியமானவர் போட்டியிட்டு ஒவ்வொரு ஓட்டையும் விலை பேசி வாங்கி  வெற்றி பெற்றார். இலை கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்காததால் அப்செட்டில்  வாக்களித்த மக்களை கூட வைத்தியமானவர் இதுவரை திரும்பி பார்க்கவில்லை என  தொகுதி முழுவதும் ஒரே குற்றச்சாட்டாக உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும்  சென்னையிலேயே தங்கியுள்ள வைத்தியமானவர் சொந்த மாவட்டத்திற்கு வந்தாலும்  தொகுதி மக்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம். ஜெயலலிதாவின் தோழியை  எதிர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இலைகட்சியில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. ஆனால் நெற்களஞ்சிய மாவட்டத்தில் கூட்டத்தை கூட்டவோ,  தீர்மானம் நிறைவேற்றவோ வைத்தி முன் வராததால் இலைகட்சி தொண்டர்கள் அவர் மீது  அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில் கூட சொந்த மாவட்டத்திற்கு  வைத்தியமானவர் வந்தபோது சொந்த கட்சியை சேர்ந்த ஒருவர் கூட வந்து அவரை எட்டி  பார்க்கவில்லை. ஒரு காலத்தில், வைத்தியமானவரை பார்க்க ஏராளமான கார்கள்  போக்குவரத்துக்கு இடையூறாக அணிவகுத்து நிற்கும். கட்சி பிரமுகர்கள்,  முக்கியஸ்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்த நிலை போய் இன்று அவரை சந்திக்க  சொந்த கட்சியினர் கூட வராதது வைத்தியமானவரை கடும் அப்செட்டாக்கியுள்ளதாம்.. இலை  கட்சியில் 49 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த சீனியர் ஒருவர்  அக்கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த போது  வைத்தியமானவருக்கு சவால் விட்டு 3 பக்க அதிரடி கடிதத்தை வெளியிட்டார். இது  பெரும் புயலை கிளப்பியதால் வைத்தியமானவர் கூடுதல் அப்செட்டில் இருந்து  வருகிறாராம்.. அதே கடிதத்தை இபிஎஸ்., ஓபிஎஸ் மற்றும் கட்சியின் முக்கிய  நிர்வாகிகளுக்கும் அனுப்பி அதிரடி காட்டியிருப்பது வைத்தியமானவருக்கு  செல்வாக்கு சரிந்து வருவதை காட்டுவதாக இலைகட்சிக்குள்ளே அரசல் புரசலாக  பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

ஆண்கள் ஜெயிலுக்கு கண்காணிப்பாளராக மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கும் லேடி ஆபீசர்ஸ் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

குக்கர் தலைவரின் மெகா பிளானுக்கு தடை போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பலாப்பழக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா