சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பருவ மழையின் தொடக்கத்திலேயே தலைநகர் சென்னை மட்டுமின்றி, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. தமிழக மக்கள், இந்த பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போதுநெஞ்சம் பதறுகிறது. ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்காமல், அதிமுகவினர் உடனடியாக களத்தில் இறங்கி மக்களின் கண்ணீரை துடைக்கும் பணிகளில் ஒவ்வொரு தொண்டரும் ஈடுபட வேண்டிய நேரம் இது. இதற்குமுன் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம், சுனாமி, புயல், கொரோனா பேரிடர் போன்ற காலக்கட்டங்களில் ஆங்காங்கே அதிமுகவினரே எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அம்மா உணவகங்கள், சமூக உணவு கூடங்கள் வழியாக பசி பிணி போக்கிய பயிற்சி நமக்கு இருக்கிறது. எனவே, அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்….