* குளத்தை சுற்றி நடைமேடை, பூங்கா* பொதுமக்கள் பெரும் வரவேற்புவடமதுரை: கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த மந்தைக்குளம் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் குளத்தை சுற்றி நடைபாதை, பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வடமதுரையில் உள்ளது மந்தைகுளம். இந்த குளம் கடந்த 10 வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது தூர்வாரப்பட்டு சுற்றிலும் நடைபாதை, பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் மக்கள் அமர்வதற்கு சிமெண்ட் திட்டுகள், பாதுகாப்பு வேலிகள், மின் விளக்கு வசதி என ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மேலும் குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்சமயம் வரை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நடை பயிற்சி செல்வோர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரத்தில் விபத்து ஆபத்துடன் நடை பயிற்சி செய்து வருகின்றனர். இனிமேல் இங்கு பாதுகாப்பான நடை பயிற்சி மேற்கொள்ளலாம். பொழுதுபோக்கு பூங்காவில் மரங்கள் வளர்க்கப்பட உள்ளன. சூப்பர்வைசர் கார்த்திக் கூறுகையில், 40 சதவீத பணிகள் முடிவு பெற்றன. மீதியுள்ள பணிகள் சுமார் 3 முதல் 4 மாதங்களில் பணி முடிவடையும் என்றார்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நகராட்சி, மாநகராட்சியில் உள்ளது போல் பொழுதுபோக்கு பூங்காக்கள், நடை பயிற்சி மேடைகள் பேரூராட்சியில் அமைய உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளை பெற்றோர்கள் பொழுதுபோக்குக்காக திண்டுக்கல் பூங்காவிற்கு கூட்டிச்செல்லும் நிலை மாறும். மேலும் தற்போது குளத்தை தூர்வாரியதால் வரும் மழைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் தேக்க முடியும். இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றனர்.வடமதுரை பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக வடமதுரை மந்தை குளத்தின் ஒரு பகுதி கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாகவும் பன்றிகள் வளரும் இடமாகவும் இருந்தது. இதனால் சுகாதாரக் கேட்டு நிலவியது. வடமதுரையில் இருந்து ஏவி.பட்டி, அம்பலக்காரன்பட்டி, போஜனம்பட்டி, தொட்டிய கவுண்டனூர் போன்ற ஊருக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மந்தை குளத்தின் அருகே உள்ள சாலை வழியாக செல்ல வேண்டும். அவ்வழியே செல்லும் போது துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த பராமரிப்பு திட்டத்தினால் இனி பிரச்சனை இருக்காது. வெறுமனே நடைபாதை பூங்கா அமைப்பதுடன் இல்லாமல் இதனை முறையாக பராமரிக்க காவலாளிகளும் நியமிக்கப்படுவர் என்றார்….