Friday, September 20, 2024
Home » மலைக்கரட்டில் பிரசவம்; குழந்தை, தாய் உயிரிழப்பு: கணவனிடம் போலீஸ் விசாரணை

மலைக்கரட்டில் பிரசவம்; குழந்தை, தாய் உயிரிழப்பு: கணவனிடம் போலீஸ் விசாரணை

by kannappan

சேலம்: சேலம் சீலநாய்க்கன்பட்டி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பார்வதி (35). இவருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி, 12 வயதில் ஒரு மகன் உள்ளான். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்த பார்வதிக்கு, ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த பூபதி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொண்ட இருவரும், கட்டிட வேலைக்கு சென்று சீலநாய்க்கன்பட்டி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அத்துடன், முதல் கணவனுக்கு பிறந்த 12 வயது மகனையும் வளர்த்து வந்தனர்.இதனிடையே, பார்வதி மீண்டும் கர்ப்பமடைந்தார். இது வெளியில் தெரிந்தால் உறவினர்கள் தவறாக நினைப்பார்கள் என எண்ணிய இவர்கள், யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை, பூபதி 8 மாத கர்ப்பிணியான பார்வதியை அழைத்துக் கொண்டு, நாழிக்கல்பட்டி துர்க்கையம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மலைக் கரட்டிற்கு ெசன்றார். அப்போது திடீரென பார்வதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனிருந்த பூபதியே பார்வதிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில், பெண் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைக்க முடிவு செய்தனர். அதன்படி அதே பகுதியில் குழிதோண்டி குழந்தையை பூபதி புதைத்துள்ளார். இதனிடையே, பிரசவித்த பார்வதிக்கு சிறிது நேரத்திலேயே வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு தண்ணீர் கொண்டுவர பூபதி சாலை பகுதிக்கு வந்தார். பின்னர் திரும்பி சென்று பார்த்தபோது, பார்வதியும் உயிரிழந்து கிடந்தார். அவ்வழியாக சென்ற சிலர் இதுகுறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள், பார்வதி மற்றும் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து பூபதி மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “முதல் கணவருக்கு பிறந்த மகன் மற்றும் பூபதிக்கு பிறந்த 2 பேர் என ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், பார்வதி 4வது முறையாக கர்ப்பமடைந்ததால், உறவினர்களுக்கு தெரியாதபடி பார்த்துக் கொண்டுள்ளனர். அதேசமயம், 8வது மாதத்தில் பார்வதி கரட்டு பகுதிக்கு சென்றதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது ஏற்கனவே திட்டமிட்டு பிறந்த குழந்தையை கொன்று புதைக்கப்பட்டதா என விசாரித்து வருகிறோம். அத்துடன், பார்வதியின் இறப்பிலும் சந்தேகம் உள்ளதால், பூபதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்….

You may also like

Leave a Comment

10 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi