சிவகங்கை : மலேசிய நாட்டில் விபத்தில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தர கோரி மனைவி கலெக்டரிடம் மனு வழங்கி கதறினார். மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த சத்தியாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடும்ப சூழல் காரணமாக அழகர்சாமி மலேசிய நாட்டிற்கு வெல்டிங் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மலேசிய நாட்டை சேர்ந்த நபர், அழகர்சாமி விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார். விபத்து தொடர்பான வீடியோக்களையும் வாட்சப்பில் அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது மனைவி சத்தியா தனது இரு குழந்தையுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டியை சந்தித்து இறந்த கணவரின் உடலை மீட்டு தர கோரி கண்ணீருடன் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்….