ஊட்டி: ஊட்டி மரவியல் பூங்காவில் இருந்து டென்மேரி செல்லும் நடைபாதையில் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி டென்மேரி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பெண்கள் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். நகரில் இருந்து இப்பகுதிக்கு செல்ல மரவியல் பூங்காவில் இருந்து ஒரு கான்கிரீட் நடைபாதை உள்ளது. இதனையே இப்பகுதி மக்கள் மற்றும் மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், இந்த நடைபாதையின் இரு புறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவிகளின் பாதுகாப்பும் கேள்வி குறியாக உள்ளது.எனவே, நடைபாதை ஓரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …