உசிலம்பட்டி, மே 8:உசிலம்பட்டியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் அரிமா சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் சுத்தம் செய்யப்பட்டு கரைப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அவற்றை முறையாக பராமரித்து வந்ததால் நன்றாக வளர்ந்திருந்தன. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சார துறையினர் கண்மாய் கரையில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்றினர்.
பின் அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்களை அமைத்துள்ளனர். இதற்கிடையே, 58ம் கால்வாய் தண்ணீர் வந்து சேரும் இந்த கண்மாய் கரையில் இருந்த மரங்களை வெட்டியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு சொந்தமான கண்மாய் கரையில் உள்ள மரங்களை வெட்டி மின் கம்பங்கள் அமைக்க முறையான அனுமதி மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இது பொதுமக்களின் முக்கிய தேவைக்காக மேற்கொள்ளப்படும் பணியாகும். இதனால் இதனை யாரும் பிரச்னையாக்க வேண்டியதில்லை என்றனர்.