மரக்காணம், மார்ச் 14: திருவாரூரில் இருந்து சென்னை நோக்கி புதுச்சேரி வழியாக இ.சி.ஆர் சாலையில் தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் (42) என்பவர் ஓட்டிவந்தார். இதில் 18க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். பேருந்து மரக்காணம் அருகே தாழங்காடு என்ற இடத்தில் பக்கிங்காம் கால்வாயில் உள்ள மேம்பாலத்தின் அருகில் சென்றபோது பேருந்தின் எதிரில் தாறுமாறாக வந்த காரின் மீது மோதாமல் இருக்க பேருந்தின் ஓட்டுநர் சடன் பிரேக் போட்டுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு சொகுசு பேருந்து பாலத்தின் அருகில் இருந்த 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி எந்தவித சேதமும் இல்லாமல் நின்றுவிட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு மாற்றுப் பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.