சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடந்தபோது புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இதுவரை 29 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இன்னும் 9 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. மயிலின் அலகில் மலர்தான் இருந்தது என்று ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றம் அனுமதித்தால் அலகில் மலருடன் கூடிய மயில் சிலை வைக்கப்படும் என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….