வருசநாடு, செப்.18: மயிலாடும்பாறை அருகே பாறைக்குளம் ஓடை முதல் சிறப்பாறை கிராமம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையானது, பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சாலையில் முறையான பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக டூவீலர், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் சிறப்பாறை கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.