மயிலாடுதுறை,அக்.2: மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி தேசிய தன்னார்வ ரத்ததான கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் மாபாரதி தொடங்கி வைத்தார். பின்னர் ரத்தக் கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடையங்களை வழங்கினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
ரத்தம் என்பது நம்உடலில் ஓடக்கூடிய உயிர்காக்கும் மருத்துவ திரவம் ஆகும். நம் நுரையீரலில் இருந்து நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் வாயுவை நம் உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதோடு உடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும் முக்கிய பொருளாகும். ரத்தம் இன்னொரு மனிதருக்கு வாழ்வளிக்கும் அதிசய திரவமாகும். ரத்ததானம் என்பது மிகவும் உகந்த செயலாகும். ரத்ததான கொடையாளர்களின் செயல்கள் மற்றவர்களின் உயிர்களை காக்கும் செயலாகும். எனவே ரத்ததானத்தை ஊக்குவிக்க வேண்டும். தானமாக கொடுக்கும் ரத்தம் மனித உயிர்களை காக்கும். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு அதன்படி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான மருத்துவம் சார்ந்த பணிகள் தொடர்ந்து தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில் ரத்த கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. ரத்தக் கொடையாளர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, 17 ரத்தக் கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார். முன்னதாக, தலைமையில் தேசிய தன்னார்வ ரத்ததான தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி, ஆர்டிஓ விஷ்ணு பிரியா, குருதி மைய அலுவலர்அருண், மருத்துவ அலுவலர்கள் மருதவாணன், அருண்ராஜ்குமார், பரணிதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.