மனைவியை தவறாக பேசியதால் தகராறு மெக்கானிக் வெட்டி கொல்ல முயற்சி: இரு நண்பர்கள் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர், பானு நகர், 8வது அவென்யூவை சார்ந்தவர் பிரித்திவிராஜ் (25). மெக்கானிக், இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது நண்பர்கள் கொரட்டூர், காமராஜர் தெருவை சேர்ந்த இம்மானுவேல்ராஜ் (23), அம்பத்தூர், புதூர், குமரன் தெருவைச்சேர்ந்த மணிகண்டன் (27). தனியார் கம்பெனி ஊழியர்கள். இந்நிலையில், நேற்று அம்பத்தூர், பானு நகர் சுடுகாட்டுக்கு அருகில் பிரித்திவிராஜ், தனது நண்பர்கள் இம்மானுவேல்ராஜ், மணிகண்டன் ஆகியோருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பிரித்திவிராஜ், இம்மானுவேல்ராஜின் மனைவியைப் பற்றி தவறாக பேசி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இம்மானுவேல்ராஜ், மணிகண்டனுடன் சேர்ந்து பிரித்திவிராஜை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார். இதில், அவருக்கு தலை, மூக்கு, வாய், வயிறு உள்ளிட்ட 10 இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து இருவரிடமும் தப்பி பிரித்திவிராஜ், பானு நகர், 3வது மெயின் ரோட்டுக்கு ரத்தவெள்ளத்தில் ஓடிவந்துள்ளார். இதனைப்பார்த்த, மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன்பிறகு, போலீசார் பிரித்திவிராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பிரித்திவிராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இம்மானுவேல்ராஜ், மணிகண்டன் ஆகிய இருவரையும் நேற்று கைதுசெய்தனர்….

Related posts

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது