மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளியுங்கள்!: மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இத்தகைய உயிரிழப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கைகளை சமர்பித்திருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல். கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார், இதுதொடர்பாக அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை; இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக விளக்கம் அளித்தார். இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, தமிழகத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்திவைத்தார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்