சேலம், ஜூன் 25: சேலம் மாநகர பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து, சந்துகடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களை பிடிக்க கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் அந்தந்த ஸ்டேஷனுக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டு கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
இந்தவகையில் நேற்று முன்தினம், மாநகர் முழுவதும் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை பிடித்து, அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுத்தனர். இதில், அம்மாபேட்டையில் கந்தம்மாள் (81), பொன்னம்மாபேட்டையில் அமுதா (42), அஸ்தம்பட்டியில் சின்னப்பொண்ணு (72)), கன்னங்குறிச்சியில் சேகர் (34), அய்யனார் (46), திருவேங்கடம் (46), காரிப்பட்டியில் கண்ணன் (37), செல்வம் (45), அழகாபுரத்தில் பழனியம்மாள் (68), வனிதா (40) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இதேபோல், சூரமங்கலத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கந்தசாமி (63), கருப்பூரில் தினேஷ் (20), கிருஷ்ணன் (38), கண்ணன் (34), பள்ளப்பட்டியில் ரங்கன் (64), ராணி (56), திருவாக்கவுண்டனூரில் சுமதி (50) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக மாநகர் முழுவதும் 7 பெண்கள் உள்பட 17 கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.