மது அருந்தியதை கண்டித்ததால் ஆத்திரம் கர்ப்பிணி எரித்து கொலை: கணவன் கைது

செங்கல்பட்டு, அக்.13: வேலைக்கு செல்லாமல் மது அருந்தியதை கண்டித்ததால், கர்ப்பிணி மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). பெயிண்டரான இவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னை மணலியை சேர்ந்த நந்தினி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு வயதில் மகன் உள்ளான். நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள நந்தினி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தினந்தோறும் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், நந்தினி தனது கணவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல நேற்று மதியம் ராஜ்குமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நந்தினி தனது கணவரிடம் அடிக்கடி நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார். நேற்று முழுவதும் மது போதையில் இருந்த ராஜசேகர், நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

தொடர்ந்து தனது ஆறு வயது மகனை தூக்கிகொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்துள்ளார். நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நந்தினி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜ்குமாரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை