அவனியாபுரம்: மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் ரிங் ரோடு வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது சந்தேகம் அடைந்த அவர்கள் அதனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் 40 கிலோ எடை கொண்ட 38 மூட்டைகளாக 1520 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த கண்ணன், மதுரை கேட்லாக் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், மதுரை முனியாண்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் வினோத் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.