மதுரை, செப். 12: மதுரையில் தொழிலதிபரை கடத்தி ரூ.8 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை ஒத்தக்கடை, அண்டமான் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர், ஒப்பந்த அடிப்படையில் எவர் சில்வர் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த செப்.8ம் தேதி இரவு ஒத்தக்கடை அடுத்த புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து கடத்தி சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரமாகியும் சுரேஷ் வீடு திரும்பாததால் அவரை குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனாலும் அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சுரேஷை கடத்திய மர்ம கும்பல் ரூ.8 லட்சம் வரை பணம் கேட்டு மிரட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுரேஷின் மனைவி தேவி (33) ஒத்தக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.