மதுரை, ஆக. 19: மதுரையில் நாளை திமுக இளைஞர், மாணவர், மருத்துவர் அணிகள் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமாறு மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்எல்ஏ, சேடபட்டி மணிமாறன் ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர்களது அறிக்கை; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து அவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரை கண்டித்தும் நாளை (ஆக.20, ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி அளவில் பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும்.
மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக, வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் என அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.